29.3.14

கடந்து சென்று கொண்டிருக்கும் கருப்பின பெண்ணடிமை










3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! வாரிஸ் டைரி! 
உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான மேரி க்ளேய்ர்நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன். ம்ஹ்ம்இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான். ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும். என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது. எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம். பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதேஅப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம். அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார். அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள். ‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள். சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன். ‘‘வாரிஸ்’’ அம்மா திடீரென்று எழுப்பினாள். நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா. வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள். படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காருஎன்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள். ‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’ நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம். பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது. பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன. த்துப்..பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள். நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன். அடுத்த நொடி… ‘பர்ர்க்என்று ஒரு சத்தம். படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி. அய்யோ…!’ -நரக வேதனை. அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின. கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’ ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள். சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம். தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன. காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும். முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது. மரண வேதனை. இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது. என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன். நாட்கள் ஓடின. நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன். ‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார். தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும். ‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனாஉன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’ அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார். அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன். அவர் என் முகத்தை திருப்பி, ‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’ நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன். அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன். ‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார். அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு. ‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’ ‘‘வணக்கம்.’’ நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது. சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார். நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன். மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார். ‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’ ‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’ ‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்குஅஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார். அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன். த்தூ.. இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன். அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு. நான் அம்மாவை நெருங்கி, ‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன். ‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’ ‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’ ‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள். நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள். அம்மாதான். ‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள். நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது. ‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள். ‘‘சத்தியமா’’ சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு. எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது. அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது. ‘’வாரிஸ், வாரிஸ்’’ திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்? இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும். நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும். அப்பா தோற்றுவிட்டார். சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது. ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்… ‘உஃஃப், உஃஃப்…’ வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள். அப்படியே தூங்கிவிட்டேன். சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல. நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன். அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது. அப்பாவாக இருக்குமோ?!’ பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன். நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது. இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன். ‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன். எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன். ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது. சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள். அப்படியானால்? கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார். அது என்னவாக இருக்கும்?’ நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும். வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார். அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள். மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லைஎன்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார். அம்மா எப்போதும் என்னை அவ்டஹொல்என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் பாலைவனப் பூஎன்று அர்த்தம். நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன். ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன். ‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து, ‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள். நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள். மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன. நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன். எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள். தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.என்றார்கள். வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன். அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும். நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.என்று தீர்மானித்தேன். பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது. நாட்கள் ஓடியதுஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர். ‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர். நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு, ‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன். சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார். சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார். ‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’ மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது. ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது. மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். அம்மாடி!அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன். அடுத்த நாள்பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள். எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள். பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன். வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன். ‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’ ‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’ ம்ம்நான் அதை மறந்துவிட்டேன். இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது. ‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன். பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார். ‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’ என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார். யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்எனக்குள் பயம் பரவத் தொடங்கியது. அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ஹல்வுவைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள். ‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள்  அப்போது அவளிடன் நிலமையைக்கூறிய போது தற்செயலாக அந்த புகைப்படக்காரரின் விசிட்டிங் கார்ட் ஹல்வின் பார்வையில் பட்டது.

 அங்கிருந்து துவங்கிய பயணம் இன்று உலகின் முன்னனி மாடல் அழகியாக கொண்டுவந்து விட்டது. இந்த உயரத்திற்கு வந்தாலும் மனது அன்று நடந்த அந்தக்கொடூரத்தைக் நினைத்து அஞ்சுகிறது. காரணம் இன்றும் எனது வயதுடைய பல குழந்தைகளுக்கு அந்தக்கொடுமைகள் தொடர்வதுதான் கொடுமையான ஒன்று இது பற்றி உலக பெண்கள் நல மையத்துடன் பல முறை ஆலோசித்திருக்கிறேன். சோமாலிய அரசும் சில சட்டங்களை கொண்டு வந்தது, ஆனால் அச்சட்டங்கள் நகர்ப்புரத்தை விட்டு இன்றும் கடக்கவில்லை. கொடுமைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வாரிஸைப் பற்றி மேலும் அறிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக