27.12.20

நீண்டகால மாயக்குதிரை-1


 

ரஜினி  எனும் மாயக்குதிரையைச் சொல்லிச்  சொல்லி மக்களை குழப்பி மடைமாற்றம் செய்து திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் செல்லவிருக்கும் வாக்குகளை பிரிப்பதகாக நினைத்து அதோ வருகிறார் , இதோ வருகிறார்.. அவருக்கு அவ்வளவு சதவீத வாக்குகள் இருக்கிறது. என்று ஒரு தரவுகள் இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ கும்பல்களும் , நடுநிலை, அரசியல் நோக்கர்கள் எனும் பேர்வழிகள்!

காலி டப்பா!

இவர் விசித்திரமானவர்!  21 வயது ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் இளம் மேயராக வர இருக்கும் நேரத்தில் 70 வயதைக்கடந்தும் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி தன்னுடைய 45 வயது கடந்த ரசிகர்களை இனிப்பினை சுவைக்க முடியாத சுகர் பேசன்டைப் போல் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார். 

1990 களில் ஆரம்பித்த பேச்சு இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவரை 007 திரைப்பட வரிசை காலத்துடன் தான் ஒப்பிட வேண்டும் .அது போகட்டும் ஆனால் இவருக்காக கட்டமைக்கப்பட்ட பின்பங்கள் தான் இமய மலையை விட பெரிதாக இருக்கிறது.

முதலில் இவரை சொல்லும் முன் இவருக்கு இந்த ஆசை தூண்டிய திரைப்பட வசன கர்த்தாக்களையும், பாடலாசிரியர்களையும் தான் சொல்ல வேண்டும் இவர்கள் இல்லையென்றால் இன்றைக்கு ரஜினி எனும் அரசியல் ஆழம் தெரிந்த குளத்தை, சமுத்திரத்திற்கு ஒப்பாக பேச முடியுமா?

1996 தேர்தலில் இவரால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று இன்று அரசியல் அரிச்சுவடி தரவுகள் தெரியாத ஆளுமைகள் பிதற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான காரணங்களையும் சூழல்களையும் ஆராய்ந்த அனைவருக்கும் தெரியும் இவர் இல்லையென்றாலும் அன்றைக்கு திமுக வெற்றி பெற்றிருக்கும். காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1991- 1996 வரை நடத்திய காட்டாச்சி தர்பாரே போதும் ... தமிழர்களின் வழிபாட்டு தெய்வங்களுக்கு வேண்டுதல் நிறைவேற்றத்திற்காக வெட்டப்பட்ட ஆடு,கோழி  தடை போட்டது, தனது உடன்பிறவா தோழி சசிகலாவுடன் கும்பகோண குளத்தில் குளியல் நீராடியது, வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிக்கணக்கான செல்வில் ஆடம்பர திருமணம் நடத்தியது, சட்ட ஒழுங்கு பிரச்சினை, ஆட்சி நிர்வாக ஸ்திரமின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அதிமுக விற்கு எதிராக இருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எரியும் தீயில் எண்ணையை ஊற்றிய செயல் போன்றது தான் அன்றைய ரஜினிகாந்தின் அறிவிப்பு. அவரது அறிவிப்பு பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று சொல்லும் சொழவம் போன்று அதன் பின் இவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் தோல்வி தான். ஏன் இவர் சொந்தமாக தயாரித்து நடித்த எல்லாத் திரைப்படங்களும் தோல்வி இன்று வரை தன் மகளின் முயற்சியில் வந்த கோச்சடையான் உட்பட 



வரலாறுகள் இப்படி இருக்க திட்ட மிட்டு தன்னிலை மறந்து பணத்திற்கு பிண அரசியல் செய்து கொண்டிருக்கும் பத்திரிக்கை,ஊடகங்கள், சில அரசியல் புரோக்கர்கள் ஆகா..ஓகோ என்று ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன...

எனவே இது போன்ற மாயக்குதிரைகளால் பொதுவாழ்வில் வெற்றி-தோல்வி இரண்டிற்கு மத்தியில் மக்கள் பணி செய்யும்  போர்வீரகளை ஒருக்காலும் வெல்ல இயலாது என்பதை வரவிற்கும் சட்டமன்ற தேர்தல் உறுதிபடுத்தும்!

- நாடற்றவன்