4.12.12

இந்து மத ஆட்சியா?


தமிழ்நாட்டில் இந்து மத ஆட்சியா நடக்கிறது? டிசம்பர் 24ஆம் தேதி வைகுந்த ஏகாதசியாம். வைஷ் ணவர்களால் பெரிதும் கொண்டாடப்படும் விழா இது.
ஸ்மார்த்தர்கள் சிவராத்திரி கொண்டாட வில்லையா? இவர்களுக்குள் இது போட்டிக் கடை அது எப்படியோ தொலைந்து போகட்டும்.
வைகுந்த ஏகாதசி சிவராத்திரி கொண்டாடும் பக்தர்கள் நேரிடையாக சொர்க்கத்துக்கே போகட்டும்!
(அந்த நாள்களில் விரதம்  இருந்து கொண்டாடு வோர் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்குப் போய் விடுவார்கள் என்பது உண்மையாகுமானால் ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் செல்லுவாரா? என்பது வேறு விடயம்)
இப்பொழுது என்ன பிரச்சினை?  சிறீரங்கத்தில் நடக்கவிருக்கும் அந்தக் கோயில் விசேடத்துக்காக  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூடிப் பேசி இருக்கிறார்கள். பக்தர்கள் அதிகம் வரக் கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை, வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்து விவாதித்துள்ளனர். அதெல்லாம் சரி தான், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையும்கூட!
ஆனால் வெளியில் வந்திருக்கும் சேதி அதிர்ச்சி தரக் கூடியதாகும். அந்த நாளில் சிறீரங்கம் வருவோர்க்குப் பேருந்தில் கட்டணம் கிடையாதாம்.
அது எப்படி என்று தெரியவில்லை. எந்தச் சட்ட விதியின்கீழ் மாவட்ட ஆட்சியர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பதை விளக்க வேண்டும்.
வைகுந்த ஏகாதசி மட்டும் நெய்யில் பொரித்ததா? மற்ற மற்ற மதக்காரர்களும் ஏன், இந்து மதத்திலேயே இன்னொரு பிரிவுக்காரர்களும் அந்த வாய்ப்பைக் கோர மாட்டார்களா?
பகுத்தறிவுவாதிகள் மதச் சார்பற்றவர்கள் எடுக்கும் விழாக்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சென்றால் மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாடு சிக்கலுக்கு ஆளாகாதா?
பக்தர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பது என்பது வேறு - இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று கூறுவது வேறு.
அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் அவ்வாறுதான் கூறுகிறது.
மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதது என்பதாகும். எல்லா மதத்தையும் சமமாகப் பாவிப்பது என்பதெல்லாம் தவறான வியாக்கியானமே!
சிறீரங்கத்துக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சலுகை? முதல் அமைச்சர் தொகுதி என்பதாலா? இது உண்மையாக இருக்குமானால், அதுகூட பிற மதத்தவர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பற்றி கடும் அதிருப்தி ஏற்படத்தான் வழி வகுக்கும்.
முதல் அமைச்சரின் தொகுதி என்பதால் சட்டத்திற்கு உட்பட்டு கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக முதல் அமைச்சர் அந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதற்காக ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக அதிகாரிகள் செயல்படத் துடிப்பது ஆபத்தானதாகும். ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமானால் அரசே அதிகாரிகளைக் கைவிட்டு விடும்.
தமிழ்நாடு எங்கும் (சென்னையைத் தவிர்த்து) வெளி மாவட்டங்களில் 16 மணிக்கு மேல் மின் தடை! ஆனால் சிறீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா நடக்கும் காலத்தில் மூன்று நாட்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமாம்.
இது என்ன கேலிக் கூத்து! அங்கு அடித்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீமான் ரெங்கநாதனுக்குச் சக்தியிருந்தால் அந்த மூன்று நாட்களுக்குமே சூரியன் மறையாமல் பார்த்துக் கொள்ள வைக்கலாமே - காற்றையும் வீசச் செய்து புழுக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே - கொசுக் கடியில்லாமலும் காப்பாற்றலாமே!
பாவம், அவர் என்ன செய்வார்? கோயில் தீப்பற்றி எரிந்து சிறீரங்கநாதனே எரிந்து வெடித்துச் சிதறவில்லையா? வேறு சிலைதானே வடித்து வைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் கல்வி வளர்ந்த சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று சொல்லுவதற்கே வெட்கப்படத்தான் வேண்டியுள்ளது.
அய்.ஏ.எஸ்., படித்து மாவட்ட ஆட்சியர் ஆனால் என்ன? பகுத்தறிவு வேலை செய்யவில்லையே! அரசமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லையே! மாவட்ட ஆட்சியர் முடிவை மாற்றாவிட்டால் எதிர் காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் பெருகிக் கொண்டே போகும். மாவட்ட ஆட்சியர் திண்டாடத் தான் நேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக