4.12.12

தருமபுரியை நோக்கி!


வரும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிக முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரின் பயணமும் தருமபுரியை நோக்கி இருக்கப் போகிறது - இருக்கவும் வேண்டும்!
ஆம் அன்று  ஜாதி - தீண்டாமையை எதிர்த்து கருத்துப் போர் தொடங்கப்பட உள்ளது. காலையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர்  ஒற்றுமை ஓங்க வேண்டிய அவசியம் - ஏன்? உரிமைகள் மறுக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் இணைந்து ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் - ஏன்? எனும் பொருளில் கருத்தரங்கமும், மாலை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள் அடங்கிய பேரணியும், சமூக நீதிச் சிந்தனையும், மனிதநேய மாண்பும், பேதமற்ற சமூகத்தைப் படைக்க விரும்பும் போராளிகளும் போர்க்குரல் கொடுக்கும் பொது மாநாடும் - என்றென்றும் பேசப்படும் வகையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளன.
மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதி வெறிக் கண் கொண்டு பார்ப்பது பாசிச நோயின் சேட்டையாகும்.
தந்தை பெரியார் அவர்கள் ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்களின் பிடியிலிருந்து பிறப்பின் அடிப்படையில் சூத்திரர்களாக்கப்பட்ட பஞ்சமர்களாக்கப்பட்ட மக்களுக்காக பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தொடங்கினார் நடத்தினார்!
அதற்காக அவர் கண்ட களங்கள் கணக் கற்றவை; - சிறைச் சாலைகள் எண்ணற்றவை; எதிர்ப்புகள், ஏளனங்கள், இருட்டடிப்புகள் இவற்றை எல்லாம் கடந்து தந்தை பெரியார் நம்மை எல்லாம் மனிதராக்கினார்.
நடக்கும் உரிமை, படிக்கும் உரிமை, உத்தியோகம் பெறும் உரிமைகள் என்று அங்குலம் அங்குலமாக தமிழர்களை மேலே உயர்த்தினார்.
தமிழன் என்னும் ஓரினக் கோட்பாட்டுக்கு பெருந்தடை ஜாதி என்பதை ஆழமாக உணர்ந்து ஜாதி ஒழிப்பை தன் முதல் கொள்கையாகக் கொண்டார்.
அதன் பலனை தமிழர்கள் அனுபவித்து வரும் இந்தக் கால கட்டத்தில், ஜாதியை முன்னிறுத்தி, தமிழர்கள் என்னும் ஓரினக் கோட்பாட்டை ஒழிக்க சிலர் முயலுகின்றனர் என்றால் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. அதே நேரத்தில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்பதிலும் அய்யமில்லை.
சமூக நீதித்தளத்தில், இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் உரிமைகள் மறுக்கப்பட்ட - வாய்ப்புகளின் கதவுகள் அடைக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்கள் பரிமாற்றம் செய்வது என்பது வேறு!
அதனைத் தலைகீழாகப் புரட்டிப் பிடித்து, தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்குத் துருப்பாகப் பயன்படுத்தும் தந்திரம் வேறு. இந்தக் கண்ணிவெடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. சிக்கிக் கொள்ளவும் மாட்டார்கள்.
ஜாதி என்னும் நச்சுக் காளான் எந்தக் காரணத்தை முன்னிட்டு வளர்க்கப்பட்டாலும் சரி, அது மறைமுகமாக பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை இன்னொருவகையில் மீண்டும் அரியாசனத்தில் அமர வைக்கும் ஆபத்தான முயற்சி என்பதை மறக்க வேண்டாம்!
அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சினையில் கொம்பு சீவி விடுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்!
புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளலாம் என்று கூறும் சூழ்ச்சியை முறியடிப்போம், வாரீர்!
தமிழ்த் தேசியம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு, பிறவியிலேயே ஆண்டாண்டுக் காலமாகத் தீண்டத்தகாத மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக ஆக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாம்! இதுதான் தமிழர்களை ஒன்றுபடுத்தும் தமிழ்த் தேசியத்தின் இலட்சணமோ! தமிழர்களை ஒன்றிணைப்பது திராவிடர் இயக்கம்தான் என்பதைக் காட்டுவோம், வாரீர்  - தருமபுரிக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக